- வீடு›
- செய்திகள்›
- வேலையிழந்த தொழிலாளர்களை மீ்ட்க கையில் பணத்தைக் கொடுப்பதுதான் தீர்வு - நிதியமைச்சக அதிகாரி
வேலையிழந்த தொழிலாளர்களை மீ்ட்க கையில் பணத்தைக் கொடுப்பதுதான் தீர்வு - நிதியமைச்சக அதிகாரி
By: Monisha Sat, 30 May 2020 12:35:49 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள், தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் சந்திக்கும் பிரச்சினையிலிருந்து மீட்க நேரடியாக பணத்தை வழங்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஊரடங்கில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்திய போதிலும், இன்னும் முழுமையாக தொழிற்சாலைகள், சிறு குறுந்தொழில்கள் இயக்கத்துக்கு வரவில்லை. இதனால் வேலையிழந்த தொழிலாளர்கள் வருமானத்துக்கு வழியில்லாமல், வறுமையிலும், பட்டினியிலும் சிக்கும் அவலம் தீவிரமடைந்துள்ளது.
இதையடுத்து, கொரோனா வைரஸால் வேலையிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியலிட மத்திய நிதியமைச்சகம் கோரியுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இப்போதுள்ள சூழலில் ஏழைகள், தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை தொடர்ந்தால் அவர்களை மீ்ட்க நேரடியாக கையில் பணத்தைக் கொடுப்பதுதான் தீர்வாக இருக்கும். ஆனால் அதுகுறித்த திட்டம் பரிசீலனையில் இருக்கிறது முடிவெடுக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பு திட்டம் மற்ற நாடுகளில் இருந்து வேறுபட்டது. இன்னும் அதிகமான திட்டங்கள் அறிவிக்கப்படும் எனக் கூறினார்.