நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது; பிரதமர் மோடி சுதந்திர தின உரை
By: Nagaraj Sat, 15 Aug 2020 08:49:37 AM
இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது. போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது என்றார்.
பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரை:
நம் நாடு சுதந்திரம் அடைய தங்களது உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் மனப்பூர்வ நன்றி. கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டின் பல்வேறு இடங்களும் மழை, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் போர்க்களமாக உள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களுக்கு நன்றி. மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது. போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது. பன்முகத்தன்மையே நமது பலம். இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர்.
சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை.
இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது.
இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம்
நிச்சயம் வெற்றி பெறுவோம். சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக
முன்னேறி வருகிறது.
ஒவ்வொரு இந்தியரும் சொந்தக்காலில் நிற்க
கற்றுக்கொள்ள வேண்டும். நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக
மந்திரம். இவ்வாறு அவர் பேசினார்.