தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது
By: Karunakaran Sun, 30 Aug 2020 5:02:27 PM
தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம்10 சதவிகிதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. இருப்பினும் நடப்பு ஆகஸ்ட் மாதம் 25 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது. மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பலத்த கனமழை பெய்தது.
இது கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 25 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், நாடு முழுவதும் இந்த ஆண்டு தற்போது வரை 296.2 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 237.2 மி.மீட்டர் என்ற அளவே ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மத்திய இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பொழிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 57 சதவிகிதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தென் இந்தியாவிலும் 42 சதவிகிதம் கூடுதலாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட குறைவாகவே மழை இருக்கும். வடகிழக்கு இந்திய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை. வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.