ஐக்கிய அரபு அமீரகத்தின் செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது
By: Karunakaran Mon, 20 July 2020 11:20:10 AM
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற சில நாடுகளே செவ்வாய் கிரகத்திற்க விண்கலத்தை அனுப்பியுள்ளன. தற்போது முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு தனது விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த வாரமே ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தநிலையில், மோசமான வானிலை காரணமாக செலுத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்த விண்கலம் ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். சுமார் 7 மாதம் பயணத்திற்குப்பின், செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி பெற்ற அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாத காலத்தில் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும் என்றும், தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என்றும் மூத்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.