டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது .. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
By: vaithegi Tue, 26 Sept 2023 11:24:50 AM
சென்னை: விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , "இறப்பதற்கு முன்னரே உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவ்வாறாக சின்னமனூரில் அரசு ஊழியர் ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்திருந்தார். நேற்று உயிரிழந்த அவரது உடலுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்த இருக்கிறோம்." என்றார்.
மதுரையில் டெங்கு பரவல் அதிகமாக இருப்பது பற்றிய கேள்விக்கு: "மதுரையில் இதுவரை 17 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பும் டெங்கு பாதிப்பு ஏற்படுகின்றது. டெங்கு பரவல் தொடர்பாக அண்மையில் அனைத்துத் துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பிலும் கூட்டம் நடத்தப்பட்டு தடுப்புப் பணிகள் பற்றி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் டெங்குவால் கடந்த 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2017-ல் 23,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர், 65 உயிரிழப்புகள் ஏற்பட்டன. கடந்த காலங்களைவிட தமிழகத்தில் தற்போது டெங்கு பரவல் கட்டுப்பாடில் உள்ளது. நோய்த் தடுப்புக்காக 476 மருத்துவக் குழுக்கள் இயங்குகின்றன. 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வரும் 1-ம் தேதி ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என அவர் கூறினார்.
உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறிய உணவகங்களில் மட்டுமே சோதனை நடைபெறுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, "எந்தக் கடையில் பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பண்டங்கள் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது.எங்கு தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடத்தப்படும்" என்றார்.
எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு, "மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028-ம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.