- வீடு›
- செய்திகள்›
- பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு மாநில அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை - ரகு சர்மா அறிவிப்பு
பாபா ராம்தேவ் நிறுவனத்திற்கு மாநில அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை - ரகு சர்மா அறிவிப்பு
By: Karunakaran Thu, 25 June 2020 7:02:38 PM
பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்தைக் கண்டுபிடித்துவிட்டதாக சில நாட்களுக்கு முன் செய்தி பரவியது. அதன்பின் அந்நிறுவனத்தின் ‘கொரோனில் மற்றும் ஸ்வாசரி’ என்ற பெயரில் சந்தையில் மருந்து விற்பனை நடைபெற்றது. இந்த மருந்து ஏழு நாட்களுக்குள் கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் வெளியிட்டுள்ள கொரோனா ஆயுர்வேத மருந்துகள் பற்றிய செய்திகளை மத்திய அமைச்சகம் அறிந்திருக்கிறது. அந்நிறுவனம் மருந்துகளின் விவரங்களை வழங்கவும், அதனை வெளியிடுவதையும், விளம்பரப்படுத்துவதையும் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின், கொரோனாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பதற்காக பதஞ்சலி நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்கப்படவில்லை என உத்தரகாண்ட மாநிலத்தின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசின் மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் ராவத், திவ்யா பார்மசி நிறுவனம் கொரோனாவுக்கென கூறி மருந்துக்கான லைசன்ஸை பெறவில்லை. மேலும் நாங்களும் இது கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கக் கூடியது எனத் தெரிவித்து ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு சர்மா, பாபா ராம்தேவ் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா மருந்துகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக எந்தவொரு திட்டத்தையும் மாநில அரசு இருந்து பெறவில்லை. மாநில அரசின் அனுமதி இல்லாமல் மனிதர்கள் மீது எந்தச் சோதனைகளையும் மேற்கொள்ள முடியாது. அரசாங்க அனுமதியின்றி மருத்துவ பரிசோதனைகளை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.