கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு
By: Karunakaran Sun, 13 Sept 2020 4:58:33 PM
சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக நடிகை
கங்கனா ரணாவத் கூறினார். இதனால் அவருக்கும், மாநிலத்தை ஆளும்
சிவசேனாவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்,
பாந்திரா பாலிஹில்லில் உள்ள நடிகையின் பங்களாவில் சட்டவிரோத புதுப்பிப்பு
பணிகள் நடந்ததாக கூறி மும்பை மாநகராட்சி அதை இடித்து தள்ளியது. இதனால்
மோதல் மேலும் வெடித்தது.
அதன்பின், நடிகை கங்கனா முதல்-மந்திரி
தாக்கரேயை அவரது டுவிட்டர் பக்கத்தில் தரக்குறைவாக விமர்சித்தார். இதனால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நடிகை கங்கனா போதை பொருள்
பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு மாநில
அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், கங்கனா
தடை செய்யப்பட்ட போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து விசாரணை
நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நடிகை கங்கனாவுடன், ஆத்யாயன் என்ற நடிகர் உறவில் இருந்தார். நடிகர்
ஆத்யாயன் சமீபத்தில் அளித்த பேட்டியில், கங்கனா தடை செய்யப்பட்ட போதை
பொருளை பயன்படுத்தினார் எனவும், தன்னையும் போதை பொருளை பயன்படுத்த
வற்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை
வைத்து தான் கங்கனா போதை பொருள் பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார்
விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனாவிற்கும், ஆளும்
கட்சிக்கும் இடையே மோதல் அதிகரித்து கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.