- வீடு›
- செய்திகள்›
- ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக ஆய்வில் தகவல்
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக ஆய்வில் தகவல்
By: Karunakaran Tue, 27 Oct 2020 12:54:59 PM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 4 கோடியே 37 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 11 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.
ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நல்ல மற்றும் ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இங்கிலாந்தில் விரைவில் பயன்பாட்டிற்குவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தின் பிரபல செய்தி நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில், லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் தொகுப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் (நவம்பர் 2) வழங்கப்படும் எனவும் இதற்காக தயார் நிலையில் இருக்கும்படி மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.