ரூ. 1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்த ஆசிரியை
By: Nagaraj Tue, 08 Sept 2020 1:33:59 PM
அரசு பள்ளி ஆசிரியை செய்த உதவி... எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியை பைரவி தம்முடைய சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி வீட்டிலிருந்து பள்ளி திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சமூக இடைவெளியுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உதவி தலைமை ஆசிரியையும் மூத்த பட்டதாரி ஆசிரியையுமாகிய பைரவி (கணிதம்) என்பவர் 10ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தம்முடைய சொந்தப் பணத்தில் சுமார் 1 லட்சம் செலவில் 4ஜி ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் 4ஜி சிம்கார்டு உடன் ரீசார்ஜ் ஆகியவற்றை வழங்கி 'வீட்டில் இருந்தே பள்ளி' என்ற அரசின் திட்டத்தைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இதுகுறித்து ஆசிரியை கூறுகையில், தம்மிடம் பயிலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே பள்ளி திட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்காத காரணம் கேட்டறிந்த போது: "சிலரிடம் ஸ்மார்ட் ஃபோன் இல்லை. சில பெற்றோர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஃபோன் எடுத்துச் சென்று விடுகின்றனர். ரீ-சார்ஜ் செய்ய வசதியின்மை போன்றவை காரணங்களாக தெரிவித்தனர்.
எனவே, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் தன்னுடைய மாணவர்களுக்கு ஃபோன்
மூலமான வகுப்பு மிகவும் அவசியம் என்று கருதி இந்த உதவியை செய்ததாக
தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய வகுப்பில் (பத்தாம் வகுப்பு
ஆங்கில வழி) புதிதாக சேரும் மாணவர்களுக்கும் இதேபோல வழங்கப் போவதாகவும்
தெரிவித்துள்ளார். மேற்படி செலவு என்பது தமது ஒரு மாத ஊதியத்தைவிடவும்
மிகவும் அதிகம் என்ற போதிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக தம்மால் இந்த
உதவி செய்ய முடிந்ததை எண்ணி பெருமையடைவதாகவும் மேலும் பல NGO
தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியால் இன்னும் பல மாணவர்களுக்கு
உதவியைப் பெற்று வழங்கிட முயற்சிப்பதாகவும் அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.