ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் விசாரணை லண்டன் கோர்ட்டில் தொடக்கம்
By: Karunakaran Tue, 08 Sept 2020 09:08:46 AM
ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர் ஆவார். இவர் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’ செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். மேலும் இவர், ஈராக் நாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய கோரத் தாண்டவம், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ சிறைச்சாலை போன்ற தகவல்களை வெளியிட்டது உலகையே அதிர வைத்தது.
இதனால் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா கடும் கோபமடைந்தது. இதனால் ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. மேலும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் உளவாளி என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ஜூலியன் அசாஞ்சே வாழ்ந்து வந்த சுவீடன் நாட்டில் அவருக்கு எதிராக பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா சுவீடனை வலியுறுத்தியது.
ஜூலியன் அசாஞ்சே சுவீடனில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று, லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈகுவடார் அரசு அவரை கைவிட்டது. பின்னர் அவரை லண்டன் போலீசார் அதிரடியாக கைது செய்து தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைத்தனர். அதன்பின், கைதான ஜூலியன் அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணை தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை பல மாதங்களுக்கு பிறகு நேற்று தொடங்கியது. நேற்று வழக்கு விசாரணை தொடங்கும் முன் ஜூலியன் அசாஞ்சே மனைவி ஸ்டெல்லா மோரிஸ் பேட்டி அளித்தபோது, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான இந்த வழக்கில் அசாஞ்சே தப்பிப்பார் என நான் நினைக்கவில்லை. இது ஒரு பேரழிவாக அமையும் என்று கவலை தெரிவித்தார்.