பொது இடங்களில் மிகப்பெரிய வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
By: Karunakaran Wed, 09 Dec 2020 4:57:55 PM
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் மிகப்பெரிய வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் பொது தரவு மையங்கள் திறக்கப்படும். இதற்கான உரிமம், கட்டணம் அல்லது பதிவு எதுவும் இருக்காது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் நாட்டில் பொது வைஃபை நெட்வொர்க்குகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். கொச்சி - லட்சத்தீவுகள் இடையே ஆப்டிக்கல் பைபர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறினார்.
ஆத்மநிர்பர் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்திற்காக நடப்பாண்டுக்காக ரூ.1584 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2020 முதல் 2023 வரையிலான, முழு திட்ட காலத்திற்கு ரூ.22,810 கோடி ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின்முலம் சுமார் 58.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் என மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
மேலும் அவர், வடகிழக்கு பிராந்தியத்திற்கான விரிவான தொலைத் தொடர்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமின் இரண்டு மாவட்டங்களில் செல்போன் சேவை வழங்குவதற்கான யு.எஸ்.ஓ.எஃப் திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இதுவரை இணைப்பு இல்லாத 2374 கிராமங்களுக்கு செல்போன் சேவை வழங்கப்படும் என கூறினார்.