சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்
By: Karunakaran Fri, 24 July 2020 2:01:50 PM
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் சுதந்திர தின கொண்டாட்டத்தை எவ்வாறு நடத்த வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டியுள்ளது.
கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. இதனை பின்பற்றியே சுதந்திர தினம் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகமாகியுள்ளதால், சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர தின விழாவில் கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.