காணொலி வாயிலாக ஐ.நா., சபை கூட்டம் செப்டம்பர் மாதம் நடக்கிறது
By: Nagaraj Wed, 10 June 2020 8:06:41 PM
முதன்முறை... 75 ஆண்டுகளில் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலக நாடுகளின் இயக்கத்தையே மாற்றி உள்ளது. சமூக விலகல்கள், ஊரடங்குகளை பல்வேறு நாடுகள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. மேலும் கரோனா தொற்று காரணமாக உலகத் தலைவர்கள் பலரும் வீடியோக்கள் மூலமே முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ, நா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ நா பொதுச்சபையின் தலைவர் திஜ்ஜானி முஹம்மது பாண்டே கூறும்போது, “ செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் 75- வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் இம்மாநாட்டில் தலைவர்கள் தனியாக கலந்து கொள்ள முடியாது. எனவே இந்த நிலையில் தலைவர்கள்பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.
உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளாத நிலையிலும் குறிப்பிட்ட தேதியில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் கரோனா தொற்றால் இதுவரை 72, 00,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.