ஹில்சா தொகுதியில் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் வெற்றி
By: Nagaraj Thu, 12 Nov 2020 09:26:55 AM
12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி... பிஹார் தேர்தலில் ஹில்சா தொகுதியில் வெறும் 12 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஐஜத) கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கும் இடையே பல தொகுதிகளில் கடும் போட்டி நிலவியது.
ஹில்சா தொகுதியில் ஐஜத வேட்பாளராக போட்டியிட்ட கிருஷ்ண முராரி சரண் 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 61,848 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளர் சக்திசிங் யாதவ் 61,836 வாக்குகள் பெற்றுள்ளார். வெறும் 12 வாககுகள் வித்தியாசத்தில் சக்தி சிங் தோல்வியடைந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சக்தி சிங் யாதவ் வெற்றி பெற்றதாக
தேர்தல் அதிகாரி அறிவித்ததாகவும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற
காத்திருந்த நேரத்தில், முதல்வர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் அதிகாரிக்கு
அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, தபால் ஓட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறி
சக்தி சிங் யாதவ் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் ஆர்ஜேடி
குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால், தங்களுக்கு எந்த நெருக்கடியும்
தரப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இரவு
தெளிவுபடுத்தியது. இதனிடையே, தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள
110 தொகுதிகளுக்கு பதிலாக 119 தொகுதிகளில் தங்கள் கூட்டணி வேட்பாளர்கள்
வெற்றி பெற்றதாகக் கூறி அந்த தொகுதிகளின் பட்டியலையும் ஆர்ஜேடி
வெளியிட்டுள்ளது.