- வீடு›
- செய்திகள்›
- உலகம் முழுவதுமுள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
உலகம் முழுவதுமுள்ள கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தகவல்களை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
By: Karunakaran Thu, 23 July 2020 10:15:06 AM
முதன் முதலாக கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கி திட்டமிட்டே பிற நாடுகளுக்கு பரவவிட்டதாக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
வர்த்தக போர், தென்சீனக்கடல் பிரச்சனை போன்றவற்றால் அமெரிக்கா- சீனா இடையே மோதல் போக்கு இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே மேலும் மோதல் போக்கை அதிகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
தற்போது சீன அரசுக்காக வேலை பார்த்து வரும் லி சியாயு (வயது 34), மற்றும் டோங் ஜியாஜி (33) ஆகிய 2 ஹேக்கர்களும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை உருவாக்கும் நிறுவனங்களை குறிவைத்து, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களிடமிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள அறிவுசார் சொத்துகள் மற்றும் வர்த்தக ரகசியங்களை திருடியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், லி சியாயு, டோங் ஜியாஜி ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக சீன அரசுக்காக இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நிறுவனங்கள் மட்டுமின்றி சீன அரசு எதிர்ப்பாளர்கள், ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள், மதகுருமார்கள் போன்ற தனிநபர்களும் அவர்களின் இலக்காக இருந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.