சீன தூதரம் உளவு வேலையில் ஈடுபட்டதால் மூட உத்தரவிட்டதாக அமெரிக்கா தகவல்
By: Karunakaran Thu, 23 July 2020 09:13:54 AM
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே வர்த்தக போர் நிலவியது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப்பின் இருநாடுகள் இடையே மேலும் மோதல் அதிகரித்துள்ளது. கொரோனா விவகாரத்தில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
மேலும் தற்போது, தென்சீன கடல் எல்லையில் சீனாவால் அச்சுறுத்தப்படும் நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருவதால், அமெரிக்கா மீது சீனா கடும் கோபத்தில் உள்ளது. லடாக் விவகாரத்திலும் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருவதால் சீனா கடும் கோபமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு வைத்து முக்கியமான ஆவணங்கள் நேற்றுமுன்தினம் இரவு தீ வைத்து எரிக்கப்பட்டன.
சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களில் ஹூஸ்டன் தூதரகத்தை மூட சீனாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் கூறுகையில், உளவு வேலையில் ஈடுபட்டதால் சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், உளவு வேலைகளில் ஹூஸ்டனில் உள்ள தூதரத்தை சீனா பயன்படுத்துகிறது. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவே ஹூஸ்டன் சீன தூதரம் மூட உத்தரவிட்டுள்ளோம் என்று கூறினார்.