- வீடு›
- செய்திகள்›
- ஈரானில் இருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட 4 சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்தது
ஈரானில் இருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட 4 சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்தது
By: Karunakaran Sat, 15 Aug 2020 1:09:08 PM
ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியபின், இருநாடுகள் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. அணுஆயுதம் தயாரித்தல், அணுஆயுதம் ஏவுகணை தயாரித்தல் போன்ற காரணங்களை காட்டி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்ததால், இருநாடுகள் மேலும் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் முதன்மை நாடாக ஈரான் விளங்குவதால், இதை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. அதன்படி, தன்னுடைய நட்பு நாடுகளிடம் ஈரானில் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியான பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் ஈரானில் இருந்து வெனிசுலாவிற்கு சுமார் 11 லட்சம் பேரலில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு லூனா, பாண்டி, பெரிங், பெல்லா என்ற நான்கு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தபோது, அந்த கப்பல்களை அமெரிககா பறிமுதல் செய்துள்ளது. பொருளாதார தடையை மீறி ஈரான் அரசு செயல்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்களின் நிலை குறித்து இதுவரை தெரியாமல் இருந்து வந்த நிலையில், ஈரானின் 4 சரக்கு கப்பல்களையும் பறிமுதல் செய்ததாக அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது. வெனிசுலாவுக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி அமெரிக்க கோர்ட்டில் கடந்த மாதம் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.