அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது - அக்னிட்டா ரைசிங் பாராட்டு
By: Karunakaran Tue, 04 Aug 2020 4:33:27 PM
அணுசக்தி துறையில் முதலீடு செய்வது குறித்து மற்ற நாடுகள் அமீரகத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக அமீரகத்தில் அணுசக்தி உற்பத்தியானது நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை கொண்டுள்ளதாக உலக அணுசக்தி அமைப்பின் பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அக்னிட்டா ரைசிங் இதுகுறித்து கூறுகையில், இன்றைய காலகட்டத்தில் தூய எரிசக்தி தேவையில் அணுசக்தியானது இன்றியமையாததாகவும், அபுதாபி அல் பரக்கா அணுசக்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியானது குறைந்த கார்பனை வெளியிட்டு அதிக மின்சார தேவையை பூர்த்தி செய்வதாக தெரிவித்துள்ளார்.
இன்னும் சில நாட்களில் அல் பரக்கா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகளும் செயல்பட தொடங்கும். இதனால் அமீரகத்தின் எரிசக்தி தேவையில் 25 சதவீதம் இந்த அணுமின் நிலையத்தில் இருந்து பெறப்பட உள்ளதாகவும், எரிசக்தி தேவையில் அமீரகம் அரபு நாடுகளில் முதலவதாக அணுசக்தியை பயன்படுத்தியுள்ளதாக அக்னிட்டா ரைசிங் கூறினார்.
மேலும் அவர், கொரோனா நெருக்கடி காலத்தில் விடாமுயற்சியுடன் அமீரகம் இந்த அணுசக்தி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது பாராட்டத்தக்கது எனவும், உலக அளவில் அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது எனவும், 2050-வது ஆண்டுக்குள் பெறப்பட உள்ள 1000 ஜிகாவாட் இலக்கில் அமீரகத்தின் பங்கும் வரவேற்கத்தக்கது என்று கூறினார்.