அதிகாரப்பூர்வமாக உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா
By: Nagaraj Wed, 08 July 2020 1:54:29 PM
உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளதற்கான கடிதத்தை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விபரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். ஆனால், ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.
இதற்கிடையே, கடந்த மே -19 ஆம் திகதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப்
எழுதிய கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு
வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட
வேண்டும். அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு
வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த
அமைப்பில் இருந்து வெளியேறும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால்,
வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பு பெரிய
அளவில் முன்னேற்றம் எதையும் காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலக
சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டொலர்கள் நிதியை
நிறுத்தினார். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரபூர்வமாக
அமெரிக்கா வெளியேறியுள்ளது.
இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான
அதிகாரபூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ
குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம் கடந்த 6 ஆம் திகதி அனுப்பி வைத்துள்ளது. உலக
சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறி விட்டதாக அமெரிக்கா
அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் திகதி ( 1
ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரபூர்வமாக அமுலுக்கு வரும் என்பது
குறிப்பிடத்தக்கது.