- வீடு›
- செய்திகள்›
- லெபனான் பிரதமர் ரபீக் கொல்லப்பட்ட வழக்கில் சர்வதேச கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
லெபனான் பிரதமர் ரபீக் கொல்லப்பட்ட வழக்கில் சர்வதேச கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு
By: Karunakaran Thu, 20 Aug 2020 4:04:52 PM
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்போதைய பிரதமர் ரபீக் ஹரிரி உள்பட 22 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு முதல் சர்வதேச கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தநிலையில், நேற்று இந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சர்வதேச கோர்ட்டு சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தற்போது, சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்த சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மை பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா செயல்பாட்டாளர் சலீம் அய்யாசுவுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமெரிக்கா வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த தீர்ப்பு ஹிஸ்புல்லாவும் அதன் உறுப்பினர்களும் லெபனானின் பாதுகாவலர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. ஹிஸ்புல்லா, ஈரானின் மோசமான திட்டங்களை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.