உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
By: Karunakaran Wed, 08 July 2020 09:35:52 AM
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தற்போது உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.
கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டு விட்டதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து சீனா மீது குற்றம் சாட்டி வருகிறார். மேலும், இதுகுறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் குற்றம் சாட்டினார்.
ஐ.நா. அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பு டிரம்பின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது. கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் இந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என கூறியிருந்தார்.
தற்போது, வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் எதையும் காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்தி விட்டார். தற்போது, இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸுக்கு அனுப்பப்பட்டது.