அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரலாம்
By: Karunakaran Wed, 02 Sept 2020 11:13:54 AM
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசியை கொண்டு வந்து விட்டால், அது தனக்கு ஓட்டுகளை அள்ளித்தரும் என தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நம்புகிறார்.
நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தபோது, பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா உருவாக்கியுள்ள தடுப்பூசி, மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-ம் கட்ட சோதனையை எட்டியுள்ளது. இந்த தடுப்பூசி, மற்றொரு குழு தடுப்பூசிகளுடன் இணைகிறது. அவை முடிவுக்கு நெருக்கமாக உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
அமெரிக்காவில் தடுப்பூசிக்கு ஒப்புதலை வழங்கக்கூடிய அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹான் இதுகுறித்து கூறுகையில், தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் 3-ம் கட்ட சோதனை முடிவதற்கு முன்பே கூட அவசர கால பயன்பாட்டை அனுமதிக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் அவர், இது அரசியல் முடிவு அல்ல. அறிவியல், மருந்து, தரவு அடிப்படையிலான முடிவுதான் என்று தெரிவித்தார். இதனால் அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தாலும் வரலாம். தேர்தலுக்கு முன்பாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் அது அதிபர் டிரம்ப்க்கு பலத்த ஆதரவை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.