- வீடு›
- செய்திகள்›
- சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் - அரசு மருந்து நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசி விற்பனைக்கு தயாராகிவிடும் - அரசு மருந்து நிறுவனம் அறிவிப்பு
By: Karunakaran Wed, 19 Aug 2020 2:20:36 PM
உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இப்படி சுமார் 165 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் எல்லா நாடுகளையும் முந்திக்கொண்டு, தாங்கள் உலகின் முதல் தடுப்பூசியை உருவாக்கி விட்டதாகவும், அதை பதிவு செய்துள்ளதாகவும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ந் தேதி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.
இருப்பினும் ‘ஸ்புட்னிக்-5’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை கடக்கவில்லை எனவும், ரஷியா தடுப்பூசியில் அவசரம் காட்டுவதாகவும், உண்மை தகவல்களை வெளியிடுவதில்லை என பல்வேறு நாடுகளில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது ரஷியாவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கியுள்ளது.
சீன அரசு மருந்து நிறுவனமான சினோபார்மும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது தடுப்பூசி விற்பனைக்கு தயாராக கிடைக்கும் என நேற்று அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவரான லியு ஜிங்ஜென் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசி நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு வந்து விடும். இந்த தடுப்பூசியின் விலை 140 டாலருக்கு குறைவாக (சுமார் ரூ.10,500) இருக்கும். இதை 2 ‘டோஸ்’ போட்டுக்கொள்ள வேண்டியது வரும். முதல் ‘டோஸ்’ போட்டு, 28 நாளுக்கு பின்னர் அடுத்த ‘டோஸ்’ போட வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர், முக்கிய நகரங்களில் மாணவர்களும், தொழிலாளர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமப்புறங்களில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளத்தேவையில்லை. எங்கள் நிறுவனம், 2 தடுப்பூசிகளை தயாரித்து பரிசோதித்து வருகிறது. இந்த நிறுவனம், ஆண்டுக்கு 22 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்கும் ஆற்றலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.