- வீடு›
- செய்திகள்›
- இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிப்பு..
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணிப்பு..
By: Monisha Wed, 20 July 2022 8:29:41 PM
இந்தியா: ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், மத்திய அரசின் தவறான கொள்கைகளே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்த சந்தையாக மாறிய பிறகு, வர்த்தக நடைமுறைகளுக்காகப் பொதுவான நாணயமாக அமெரிக்க டாலரை பயன்படுத்தி வருகின்றன.
ரஷ்யா-உக்ரைன் போர், பணவீக்கம் ஆகியவற்றால் பல்வேறு நாடுகளும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன. அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகு, சர்வதேச சந்தையில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றன.இதன் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 80 ரூபாயாக சரிந்தது.ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், மத்திய அரசின் தவறான கொள்கைகளே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஒரு பக்கம் எனில், இந்திய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அளவும் 200 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. அதே போல், அரசுக் கடன் பத்திரங்கள், கம்பெனி கடன் பத்திரங்கள் போன்றவற்றிலிருந்தும் முதலீடுகள் வெளியேறுகின்றன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து அழுத்தத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம் போன்றவற்றின் விலை குறைந்திருந்தாலும், ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, தங்கம் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கினறனர்.பணவீக்கம் காரணமாகவும், ரூபாய் வீழ்ச்சியின் காரணமாகவும் விலை உயரவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இவை மட்டுமல்லாமல் பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.