மீண்டும் வார்த்தை போரை தொடங்கினார் அவைத்தலைவர் நான்சி பெலோசி
By: Nagaraj Fri, 24 July 2020 7:50:59 PM
வார்த்தை போர் தொடங்கியது... அமெரிக்க பிரதிநிதிகள் அவைத்தலைவரான நான்சி பெலோசி அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் ஜூலை 21 ஆம் நாள் மீண்டும் வார்த்தைப் போரைத் தொடங்கியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் டிரம்பின் எதிர்வினையையும் முயற்சியையும் குறைகூறிய அவர், கொரோனா வைரசை ''டிரம்ப் வைரஸ்'' எனக்கூறி அரசுத் தலைவரை விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் கொரோனா பெருந்தொற்று விவகாரத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் செயல்பாடுகள் குறைவானதும் தாமதமானதுமானவை எனச் சுட்டிக் காட்டினார்.
கொரோனா வைரசை ''டிரம்ப் வைரஸ்'' எனப் பலமுறை குறிப்பிட்ட அவர், அரசுத்
தலைவர் செல்லும் இடங்களிலெல்லாம் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்களை
நடத்துவதற்குப் பதிலாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே முகக்கவசம்
அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்பதை வலியுறுத்தி சொல்லி
இருப்பாரேயானால், கூடுதலான மக்கள் அவர் தலைமையை ஏற்றுக் கொண்டிருப்பர்.
ஆனால்
அரசுத் தலைவராக இருக்கும் டிரம்பே முகக் கவசம் அணியாமல் இருந்ததன் வழி
மக்களுக்குத் தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்.