மணமகளுக்கு கொரோனா தொற்றால் மையத்திலேயே நடந்த திருமணம்
By: Nagaraj Mon, 07 Dec 2020 4:27:52 PM
கொரோனா மையத்தில் திருமணம்... ராஜஸ்தானில் திருமண நாளன்று மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை மையத்திலேயே அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் பாரா பகுதியை சேர்ந்த அப்பெண்ணிற்கு நோய்த்தொற்று உறுதியானதால், அவர் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனாலும், மருத்துவர்களின் உதவியுடன் மணமகன் அங்கேயே வரவழைக்கப்பட்டு, இளம் ஜோடி தனிமனித கவச உடை அணிந்த நிலையில், இந்து முறைப்படி நிச்சயிக்கப்பட்ட முகூர்த்தத்தில் திருமணம் நடத்தப்பட்டது.
மருத்துவர்களும் கவச உடைகளை அணிந்து திருமணத்தில் பங்கேற்றனர். இந்த திருமணம் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பலரும் திருமண ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மணமகள் குணமடைந்து வர பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.