குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரிப்பு என உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு
By: vaithegi Fri, 08 July 2022 05:40:23 AM
ஜெனீவா, கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை பெரும் அளவு அச்சுறுத்தி வருகிறது. இந்நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது.
இப்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனைக்கூட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மேலும் கடந்த 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மையால் இதுவரை மட்டும் 3 பேர் இறந்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள். இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "குரங்கு அம்மை வைரஸ் அதிகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. 80 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு, ஐரோப்பாவில பதிவாகி உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.