ரஷியாவின் கொரோனா தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய உலக சுகாதார நிறுவனம் ஆர்வம்
By: Karunakaran Thu, 13 Aug 2020 11:58:46 AM
உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் என பல நாடுகளும் களம் இறங்கியுள்ளன. ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பூசியை தாங்கள் உருவாக்கி உள்ளதாக ரஷியா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை அந்நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளது.
தற்போது இந்த தடுப்பூசி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 20 நாடுகளில் இருந்து 100 கோடி தடுப்பூசி ‘டோஸ்’ ஆர்டர் ரஷியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷியாவின் ஸ்புட்னிக்-5 தடுப்பூசி உருவாக்கம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக உலகில் உள்ள பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷிய கூட்டமைப்பின், தேசிய மருந்துகள் பதிவு அமைப்பில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டு விட்டது என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிந்துள்ளது. இது தொடர்பாக ரஷிய விஞ்ஞானிகளுடனும், அதிகாரிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மேலும் தடுப்பூசி சோதனை விவரங்களை ஆய்வு செய்ய காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றங்களையும் உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளது.