3டி பிரின்டர் உதவியுடன் உலகின் மிகச்சிறிய படகை உருவாக்கி சாதனை
By: Karunakaran Sun, 01 Nov 2020 6:22:34 PM
நெதர்லாந்தின் லெய்டென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, மனித உடலுக்குள் பயணிக்கக்கூடிய நேனோ அளவில் நீந்தி செல்லும் வடிவங்களை உருவாக்குவது சாத்தியமா? என ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக, அவற்றை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உலகின் மிகச்சிறிய படகை நெதர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட 3டி பிரின்டரைப் பயன்படுத்தி படம்பிடித்து, அதன் அடிப்படையில் வெறும் 30 மைக்ரோ மீட்டர் நீளத்தில் குட்டிப் படகை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
இவர்கள் உருவாக்கிய படகானது, "பெஞ்சி" படகின் ஒரு சிறிய நகலாகும். இந்தப் படகின் குறுக்களவு மனித தலைமுடியைவிட சிறியது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கிறது. இருப்பினும், இது சாதனைக்காக மட்டும் இந்த குட்டிப் படகு உருவாக்கப்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் மற்றும் பிற திரவங்களில், வேதிவினை மூலம் வேகமாக நீந்தும் நேனோ வடிவங்களை உருவாக்கும் சோதனையின் ஒரு பகுதியாக இந்த படகை உருவாக்கியுள்ளனர். இருப்பினும் இந்த படகு உலகின் மிகச்சிறிய படகு என சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.