கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிதான் ஏற்படும் - உலக சுகாதார நிறுவனம்
By: Karunakaran Wed, 01 July 2020 12:05:33 PM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது கொரோனா வைரஸ் தோன்றி 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் கொரோனா தாக்கம் குறையவில்லை. உலகெங்கிலும் சுமார் 1 கோடி பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை இல்லை. தற்போது இருப்பதைக் காட்டிலும், வைரசின் மோசமான பாதிப்பை உலகம் இனிதான் எதிர்கொள்ள நேரிடும் என்று கூறினார்.
மேலும் அவர், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணிகளோடு அது உருவாகிய இடத்தை கண்டறிவதும் அவசியம் என்பதால், சீனாவுக்கு குழு ஒன்றை அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் எப்படி பரவத்தொடங்கியது என்பதை கண்டறிய அனுப்பியதாக கூறியுள்ளார்.
எப்படி பரவத்தொடங்கியது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டால்தான் கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக போராட முடியும், அப்போதுதான் எதிர்காலத்துக்காக நாம் தயாராக முடியும் என்று டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார்.