- வீடு›
- செய்திகள்›
- போதையில் பைக்கில் தடுமாறிய வாலிபர்... குளிப்பாட்டி எச்சரிக்கை செய்து அனுப்பிய போலீசார்
போதையில் பைக்கில் தடுமாறிய வாலிபர்... குளிப்பாட்டி எச்சரிக்கை செய்து அனுப்பிய போலீசார்
By: Nagaraj Sat, 18 June 2022 8:56:15 PM
தஞ்சாவூர்: வாகனச் சோதனையின் போது போதையில் பைக்கை ஓட்ட முடியாமல் ஓட்டி வந்த வாலிபரை போக்குவரத்து பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்று குளிப்பாட்டி எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
தஞ்சை ராஜராஜ சோழன் சிலை அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன தணிக்கை நடந்து வந்தது. அப்போது குடிபோதையில் ஒரு வாலிபர் பைக்கை கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டி வந்தார். இதை பார்த்த போக்குவரத்து போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் தஞ்சையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சதீஷ் (22) என்பது மட்டும் தெரிய வந்தது.
மேற்கொண்டு அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் போதையில் தெளிவில்லாமல் உளறினார். குடிபோதையில் இருந்த சதீஷ் ஏதேதோ உளறி தள்ளினார். இதையடுத்து அவரை போக்குவரத்து காவல் பிரிவிற்கு அழைத்துச் சென்ற போலீசார் சதீசின் போதை தெளிய வைக்க அவரை தண்ணீரால் குளிப்பாட்டினர். பின்னர் அவரிடம் விசாரித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போக்குவரத்து காவல் பிரிவுக்கு வந்த சதீஷின் பெற்றோரின் வேண்டுகோள்படி தஞ்சாவூரில் செயல்படும் மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சதீசை சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.