- வீடு›
- செய்திகள்›
- வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்
வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியின் கீழ் அப்பாவி மக்கள் படும் கொடுமைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்
By: Karunakaran Sat, 05 Sept 2020 6:44:25 PM
வடகொரியாவில் பிறந்த யியோன்மி பார்க் என்ற இளம்பெண் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படுத்தி, வடகொரியாவில் வசிக்கும் அப்பாவி மக்களின் நிலையையும் வெளியிட்டுள்ளார். வடகொரியாவில் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள் சத்தான உணவுக்காக பூச்சிகளையே சாப்பிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் இருந்து தமது 13-வது வயதில் வெளியேறும் வரை பார்க்கும் பூச்சிகளை சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். பொதுவாக சேரிப்பகுதிகள் போன்றே வடகொரிய தெருக்கள் காணப்படுவதாகவும், தெருக்களில் கேட்பாரற்று சடலங்கள் கிடப்பதையும் தாம் அந்த சிறு வயதில் காண நேர்ந்ததாகவும், பள்ளிகளில் நட்பு அல்லது காதல் என்பதையே காண முடியாது. மின்சாரம் கூட வடகொரியாவில் பொதுவல்ல என்று கூறியுள்ளார்.
வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையில் 43 சதவீதம் மக்கள் நாளுக்கு ஒரு வேளை உணவருந்துபவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிம் ஜாங் நிர்வாகம் கோடி கணக்கான டாலர்கள் செலவில் அணுஆயுதம் தயாரிக்க முனைப்பு காட்டுவதாகவும், அதில் ஒரு 20 சதவீதம் மக்களுக்காக செலவிட்டால் நாட்டில் பட்டினிச்சாவுகள் இருக்காது என பார்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து சீனர் ஒருவரை நம்பி பார்க் தமது தாயாருடன் வெளியேறியுள்ளார். ஆனால் அந்த நபர் தாயாரையும் 13 வயது சிறுமியையும் இன்னொரு சீன கும்பலுக்கு விற்றுள்ளார். அந்த கும்பல் பார்க்கின் தாயாரை பாலியல் தொழிலுக்கு தள்ளியது. பின்னர் அங்கிருந்து தப்பி மங்கோலியா சென்று, கோபி பாலைவனத்தைக் கடந்து, தென் கொரியாவில் பார்க்கின் சகோதரியுடன் இணைந்துள்ளனர். அதன்பின் 2014-ல் அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது நியூயார்க் நகரில் பார்க் வசித்து வருகிறார்.