கடந்த ஒரு மாதமாக சீனாவில் கொரோனாவால் இறப்பு எதுவும் இல்லை
By: Nagaraj Fri, 15 May 2020 9:46:08 PM
ஒரு மாதமாக கொரோனாவால் இறப்பு இல்லை... சீனாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை.
கடந்தாண்டு சீனாவின் வூஹானில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் உயிரை இழந்துள்ளனர். சீனாவில் கொரோனா தொற்றுக்கு 82,933 பேர் பாதிக்கப்பட்டு, 4,633 பேர் பலியாகினர். தேசிய சுகாதார கமிஷன் வெளியிட்ட தகவலின்படி, வடகிழக்கு மாகாணமான ஜிலினில் உள்ளூர் பரவல் காரணமாக வெள்ளியன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடைசியாக ஏப்.14ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, கடந்த ஒரு மாதமாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை.
சமீபத்தில் கொரோனா அறிகுறி இல்லாமல் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உட்பட 623 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். 91 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றின் பிடியில் சிக்கியுள்ள உலக நாடுகள் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்ள திணறி வரும் நிலையில், சீனா சமூக இடைவெளியை பின்பற்றி மிகப்பெரிய தொழிற்சாலைகளை திறக்க அனுமதியளித்ததுடன், பள்ளிகள், வணிக நிறுவனங்களை திறந்து, மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்புவதற்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.