இந்திய கடற்படைக்கென்று ஒரு வழிகாட்டும் நெறிமுறை உள்ளது - இந்திய கடற்படை தளபதி
By: Karunakaran Fri, 04 Dec 2020 09:43:51 AM
1971-ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான்போரின்போது டிசம்பர் 4-ந்தேதி, பாகிஸ்தானின் 4 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை மூழ்கடித்தது. இந்திய கடற்படையின் இந்த சாதனையை, பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நேற்று இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் பேட்டி அளித்தபோது சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கிற வகையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால், இந்திய கடற்படைக்கென்று ஒரு வழிகாட்டும் நெறிமுறை உள்ளது. அதைச்செய்வோம் என இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் குறிப்பிட்டார்.
அதாவது, வாலாட்டுவோருக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்பதை அவர் இவ்வாறு குறிப்பாக உணர்த்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் பி-81 மற்றும் ஹெரான் ட்ரோன் கள் (ஆளில்லா விமானங்கள்), கிழக்கு லடாக் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடற்படை உயிர்ப்புடன் உள்ளது என்று கூறினார்.
நாங்கள் என்ன செய்தாலும், அது இந்திய ராணுவத்துடனும், விமானப்படையுடனும் ஒருங்கிணைந்துதான் செய்வோம். இந்திய கடல் பிராந்தியத்தில் சவால்கள் இருக்கின்றன. இந்த சோதனையான கால கட்டத்திலும் இந்திய கடற்படை உறுதியுடன் நிற்கிறது. இந்திய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த முத்தரப்பு சேவை (எம்.டி.சி.) கட்டளையை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இன்னும் சிறிது காலத்தில் இது வெளிவரும். இந்திய கடற்படையில் நீருக்கடியிலான செயல்திறனை மேம்படுத்துவதில் கடற்படை கவனம் செலுத்துகிறது. கடற்படையில் மூன்றாவது விமானம்தாங்கி போர்க்கப்பல் தேவை குறித்து தெளிவாக இருக்கிறோம் என இந்திய கடற்படை தளபதி கரம்பீர்சிங் கூறினார்.