தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்
By: Nagaraj Tue, 25 Apr 2023 7:54:15 PM
சென்னை: கனமழைக்கு வாய்ப்பு... தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்னிந்தியாவின் மேல் பருவமழை மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கும் பகுதி உள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நாளை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.