பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை
By: Nagaraj Thu, 10 Nov 2022 10:16:38 PM
புதுடெல்லி : உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள தேசிய ராணுவ கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதன்பின், நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரால் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளும் போரினால் எரிபொருள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. அதில் இந்தியாவும் அடங்கும். சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, அதிக விலைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் புதிய பரிமாணம்
உருவாகியுள்ளது. சைபர் தாக்குதல்கள் மற்றும் தகவல் அடிப்படையிலான
தாக்குதல்கள் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பெரும் சவாலாக உருவெடுத்து
வருவதாக அவர் கூறினார்.
இந்த சைபர் தாக்குதலால்
மின் உற்பத்தி, போக்குவரத்து, பொதுத்துறை மற்றும் தொழில்துறைகள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டுள்ளன என்றார். தகவல் அடிப்படையிலான தாக்குதல்களால் நாட்டின்
அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.