சமூக பரவல் ஏற்படாததால் முழுஊரடங்கு தேவை இல்லை - தூத்துக்குடி கலெக்டர்
By: Monisha Wed, 24 June 2020 5:00:59 PM
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்துக்கு இலங்கை, மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் இதுவரை சுமார் 1,400 பேர் வந்து உள்ளனர். அனைவருக்கும் முறையான பரிசோதனை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது மாலத்தீவில் இருந்து 198 பேர் வந்து உள்ளனர். அவர்கள் உரிய பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பஸ்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வருகிற 28-ந் தேதி ஈரான் நாட்டில் இருந்து இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் மூலம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கடலோர மாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருகை தர உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் சுமார் 650 பேர் முதல் 700 பேர் வரை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக தொற்று உள்ள நபர்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்பாளர்கள் கண்டறியப்பட்டு 100 சதவீதம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
கொரோனா தொற்று உள்ளவர்களின் விவரங்கள் அனைத்தும் சரியான முறையில் சேகரிக்கப்பட்டு வருவதால் சமூக பரவல் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்துக்கு முழுஊரடங்கு உத்தரவு தற்போது தேவை இல்லை. தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.