ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ஒன்றுமே இல்லையப்பா - உணவுத்துறை அமைச்சர் சாடல்
By: Karunakaran Thu, 28 May 2020 4:53:07 PM
கொரோனாவால் 2 மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந் நிலையில் மக்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக கூறப்பட்டது. அந்த மனுக்கள் அனைத்தும் டி.ஆர்.பாலு தலைமையில் தலைமை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்படியாக திமுக அளித்த மனுக்களில் ஒன்றில் கூட ஒரு கோரிக்கையும் இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னையில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் திமுக பெற்ற மனுக்களை தமிழக அரசு ஆய்வு செய்து அந்தந்த ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால் அதில் திமுகவினர் குறிப்பிட்டது போல முக்கிய கோரிக்கை எதுவும் இல்லை. பகல் இரவு பாராது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, இந்த லட்சக்கணக்கான மனுக்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் லட்சம் மனுக்கள் கூட இல்லை. அந்த மனுக்கள் அதிமுக அரசை குறை கூறவே அளிக்கப்பட்டுள்ளன. புகார் மனுக்களில் உள்ள தொலைபேசி எண்கள் பல தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.
அரசு மீது போலியான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் முன் வைக்கிறார். தரம் தாழ்ந்த அரசியலை ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார் என உணவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்