சத்தியத்துக்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை - ராகுல்காந்தி
By: Karunakaran Thu, 09 July 2020 1:18:01 PM
ராஜீவ் காந்தி நினைவு அறக்கட்டளை, இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் ஆகிய 3 அமைப்புகளும் சோனியா காந்தி குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த 3 அமைப்புகளும் பெற்ற நிதி, நன்கொடை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்து அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை நியமித்துள்ளது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அறக்கட்டளைகள் மீதான விசாரணை குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், உலகம் அவரை போன்றது என மோடி நம்புகிறார். ஒவ்வொருவருக்கும் விலை இருப்பதாக அவர் நினைக்கிறார். அப்படி இல்லாத பட்சத்தில் மிரட்டல் மூலம் எண்ணியதை சாதிக்கலாம் என அவர் அவர் நினைக்கிறார். ஆனால் சத்தியத்துக்காக போராடுபவர்களுக்கு விலை இல்லை. அவர்களை மிரட்ட முடியாது என்பதை மோடி ஒரு போதும் புரிந்துகொள்ளமாட்டார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., விவேகானந்தா அறக்கட்டளை, பா.ஜ.க.வின் வெளிநாட்டு நண்பர்களால் நடத்தப்படும் அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றை அரசாங்கம் பாதுகாக்கிறது. இதுபோன்ற அறக்கட்டளைகளிடம் கேள்விகள் கேட்கப்படவில்லை. ஆனால் சோனியா காந்தி குடும்பத்தினரின் அறக்கட்டளைகளிடம் கேட்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.