மசூர் பருப்பு இறக்குமதியில் எவ்வித பிரச்னையும் இல்லை... மத்திய அரசு விளக்கம்
By: Nagaraj Mon, 25 Sept 2023 11:24:13 AM
புதுடில்லி: கனடா பருப்பு இறக்குமதி.. கனடா உடனான உறவில் சிக்கல் இருந்தாலும், அந்நாட்டில் இருந்து சுமார் 1 லட்சம் டன் மசூர் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு 23 லட்சம் டன் மசூர் பருப்பின் தேவை உள்ளது. உள்நாட்டிலேயே 16 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பற்றாக்குறையை சமாளிக்க கனடாவில் இருந்து கணிசமான அளவுக்கு மசூர் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்தியா - கனடா இடையேயான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதியில் எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் போதுமான மசூர் பருப்பு கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.