இன்று தளர்வுகளே கிடையாது... மக்களை வீட்டுக்குள் முடக்கிய முழுமையான ஊரடங்கு
By: Nagaraj Sun, 21 June 2020 11:34:29 AM
தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு... சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று(ஜூன் 21) தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க, சென்னையிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், சில பகுதிகளிலும், 19ம் தேதி முதல், வரும், 30ம் தேதி வரை, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இப்பகுதிகளில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கடைகள் மதியம் வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது.
அலுவலகங்கள் இயங்குவது உட்பட, சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. ஆனால்,
இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று
நள்ளிரவு துவங்கிய, முழு ஊரடங்கு, நாளை காலை, 6:00 மணி வரை, எவ்வித
தளர்வுமின்றி அமல்படுத்தப்படும்.
இதனால், பால் வினியோகம்,
மருத்துவமனைகள், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர்
ஊர்திகள் தவிர, வேறு எவ்விதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர
மருத்துவ தேவைகளுக்கு மட்டும், தனியார் வாகன உபயோகம்
அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி, அரசு
அறிவுறுத்தி உள்ளது.
சென்னையை போல, வேறு சில மாவட்டங்களும், நோய்
பரவலை தடுக்க, இன்று காய்கறி மார்க்கெட், மீன் மற்றும் மாமிச விற்பனை
கடைகளுக்கு தடை விதித்துள்ளன. இதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்,
வரும், 28ம் தேதியும், தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என,
அரசு அறிவித்துள்ளது.