அணு ஆயுத விவகார பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை; வடகொரியா அதிபரின் சகோதரி அறிக்கை
By: Nagaraj Sat, 11 July 2020 3:21:20 PM
பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை... அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இடையே, நடப்பு ஆண்டில் அணு ஆயுத விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என வடகொரிய தலைவரின் தலைமைத் தளபதியாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணியாற்றும் அவரது சகோதரியான கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயர் மட்ட பேச்சுவார்த்தைக்கு ஈடாக அமெரிக்கா வடகொரியாவுக்கு எந்த வெகுமதியையும் வழங்காதபோது கிம் ஜோங் உன்னும் அதை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை.
2 உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான முடிவை பொறுத்து ஆச்சரியமான விடயம் இன்னும் நடக்கக் கூடும். இரு நாட்டு தலைவர்கள் இடையே நேரடி சந்திப்பு தேவைப்பட்டால், அது அமெரிக்காவின் தேவை. வடகொரியாவை பொறுத்தவரை அது நடைமுறைக்கு மாறானது. அதை எங்களுக்கு எந்த பலனையும் தராது.
மீளமுடியாத இந்த சமயத்தில் அமெரிக்கா வழங்கும் வெகுமதிகளே இரு
நாடுகளுக்கிடையிலான தூதரக உறவை காப்பாற்றும். அணு ஆயுதங்களை முழுமையாக
கைவிடுவது சாத்தியமில்லாத ஒன்று அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த
விரும்புகிறோம். அதனால் நாங்கள் சொல்வது என்னவென்றால் இந்த நேரத்தில் அது
சாத்தியமில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை
மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி
வந்த வடகொரியாவை, அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக கடந்த 2018ஆம்
ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி, முதல் முறையாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப்பும், வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையில்
குறிப்பிட்டு சொல்லும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால்
ட்ரம்பும், கிம் ஜோங் உன்னும் இரண்டாவது முறையாக கடந்த பெப்ரவரி மாதம்
வியட்நாமில் சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எதிர்பாராத
விதமாக தோல்வியில் முடிந்ததால் இருநாடுகளுக்கு இடையிலான அணுஆயுத
பேச்சுவார்த்தை முடங்கி போனது.
இந்த சூழலில் யாரும் எதிர்பாராத
வகையில் ட்ரம்ப், கடந்த ஜூன் மாதம் வடகொரியாவுக்கு நேரில் சென்று கிம் ஜோங்
உன்னை சந்தித்தார். அப்போது முடங்கிப்போன அணுஆயுத பேச்சு வார்த்தையை
மீண்டும் தொடங்குவது என இருநாட்டு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
ஆனால்,
அதன்பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தை உயிர்பெறவில்லை. இதன்பிறகு
இருநாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத
நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை கைவிடுவதாக அறிவித்தன. அதுமட்டும்
இன்றி இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு வடகொரியா தொடர்ந்தும் அணு ஆயுத
சோதனைகளை நடத்தி வருகின்றது.
ஆனால், அணு ஆயுதங்களை முழுமையாக
கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது
அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது. இதன் காரணமாக இரு நாடுகளின் உறவில்
தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எனினும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங் உன் இடையே விரைவில் மூன்றாவது
சந்திப்பு நடைபெறும் என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் வட கொரியா
இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.