இடுக்கியில் லேசான நில நடுக்கம்...எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை
By: vaithegi Sat, 30 July 2022 12:20:48 PM
திருவனந்தபுரம்: கேரளாவின் மலையோர மாவட்டமான இடுக்கியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று அதிகாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் இருந்த பொருள்கள் உருண்டு கீழே விழுந்தது. சுவர்களிலும் லேசான விரிசல் ஏற்பட்டது. இதுபற்றி அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதை அடுத்து இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, கேரள மாநில மின்வாரியத்தின் ஆலடி மற்றும் குளமாவு பகுதியில் உள்ள ஆய்வு மையங்களில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பதிவாகி இருந்தது. ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் 3.1 மற்றும் 2.95 ஆக பதிவாகி இருந்தது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையபுள்ளி எங்கு தொடங்கியது என்பதை கண்டறியும் பணியில் ஆய்வு மைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலநடுக்கத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.