மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு இருக்காது; சுகாதாரத்துறை மந்திரி தகவல்
By: Monisha Sat, 25 July 2020 10:54:59 AM
கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மாநிலத்தில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 117 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 99 ஆயிரத்து 967 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 13 ஆயிரத்து 132 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இனி ஊரடங்கு இருக்காது என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் மிஷன் பிகின் அகெய்ன் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இயல்பு நிலை தொடங்கிவிட்டது. இனி ஊரடங்கு இருக்காது. மாநிலத்தில் உள்ள உடற்பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களை மீண்டும் திறக்கலாமா? என்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் உடற்பயிற்சி மக்களின் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும். எனவே உடற்பயிற்சி மையங்கள் விரைவில் திறக்கப்படும். இதுகுறித்த வழிமுறைகள் அரசால் உருவாக்கப்படும். இருப்பினும் இதுபற்றி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இறுதி முடிவு எடுப்பார்.
ஆயினும் உள்ளூர் ரெயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.