இந்த சட்டமன்ற தேர்தலே எனது கடைசி தேர்தல் - முதல்மந்திரி நிதிஷ் குமார்
By: Karunakaran Fri, 06 Nov 2020 08:52:33 AM
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28 நடைபெற்றது. இடண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3 நடைபெற்றது. மேலும், இறுதிகட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதல்மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா இணைந்த கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி இணைந்த மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதேபோல் ஆளும் என்டிஏ கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது.
இந்நிலையில் 3-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு நட்சத்திர பேச்சாளர்களும் தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் தேர்தலுக்கு பின்னர் தான் தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என பீகார் முதல்மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பூர்னியா பகுதியில் பிரசார நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார், இதுவே எனது கடைசி தேர்தல் என்று கூறினார். 69 வயது நிரம்பிய நிதிஷ் குமார் 2005-ம் ஆண்டு முதல் பீகார் முதல்மந்திரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிதிஷ் குமார் இந்த தேர்தலுக்கு பின் ஆட்சியிலிருந்து ஓய்வு பெறலாம்.