- வீடு›
- செய்திகள்›
- பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பதற்கு இது நேரம் அல்ல - சோனியா காந்தி
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிப்பதற்கு இது நேரம் அல்ல - சோனியா காந்தி
By: Karunakaran Tue, 30 June 2020 09:09:12 AM
கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில், மக்களை ஒருபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. மற்றொருபுறம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் தள்ளுகிறது. பெட்ரோல், டீசல் மீது ஏற்றப்பட்ட விலையை உயர்வை மத்தியில் ஆளும் மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி ஆதாயம் அடைவதற்கும் , லாபம் சம்பாதிப்பதற்கும் இது நேரம் அல்ல. கடினமான சூழலில் பொதுமக்களை ஆதரிப்பதே அரசின் பொறுப்பு எனவும், இந்த விலை உயர்வால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழைகள், உழைக்கும் மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.