ஜோர்ஜ் ஃபிலாய்ட் உடலுக்குக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி
By: Nagaraj Tue, 09 June 2020 8:12:24 PM
இறுதி அஞ்சலி... நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஜோர்ஜ் ஃபிலாய்ட் பிறந்த இடமான ஹூஸ்டனில் உள்ள தி ஃபவுண்டேன் ஒஃப் பிரைஸ் தேவாலயத்தில் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். ஆறு மணி நேரம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் பூதவுடலுக்கு 6,362 பேர் அஞ்சலி செலுத்தியதாக உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது பார்வையாளர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களுக்கு இணங்க முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து அஞ்சலி நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
இதனிடையே ஜோர்ஜ் ஃபிலாய்டின் சகோதரரான பிலோனிஸ் ஃபிலாய்ட், ‘ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் இழப்பு வேதனை அளிக்கிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும். நாங்கள் அதைப் பெறுவோம். இந்த கதவை மூட விடமாட்டோம். ஃபிலாய்ட் நிறைய பேருக்கு ஒரு பெரிய முன்மாதிரியாக இருந்தார்’ என கூறினார்.
மேலும், ஜோர்ஜ் ஃபிலாய்ட், அவரது தாய்க்கு அடுத்ததாக ஹூஸ்டனில் அடக்கம் செய்யப்படுவார் என்று ஃபோர்ட் பெண்ட் நினைவு திட்டமிடல் மையம் தெரிவித்துள்ளது. 46 வயதான ஜோர்ஜ் ஃப்ளாய்ட், மே 25ஆம் திகதி அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாண தலைநகர் மினியாபொலிஸில், பொலிஸ் அதிகாரி சாவின் பிடியில் எட்டு நிமிடம் 46 நொடிகளுக்கு கழுத்து நெறிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.