- வீடு›
- செய்திகள்›
- மூன்று பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - ஹர்தீப் சிங் பூரி தகவல்
மூன்று பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது - ஹர்தீப் சிங் பூரி தகவல்
By: Karunakaran Sat, 08 Aug 2020 6:35:43 PM
கொரோனா ஊரடங்கினால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள், மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். துபாயில் சிக்கி தவித்த 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் மற்றும் 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு வந்தனர்.
துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு வந்த அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியபோது, பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.இதனால் விமானம் தரையிறங்கியபோது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று கோழிக்கோடு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். அதன்பின், மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். 149 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 23 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சில பயணிகள் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் மூன்று பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவதாகவும், விமான விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்ததில், இரண்டு கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள டேட்டாவை ஆராய்ந்த பின்னர், விபத்துக்கான காரணத்தை அறிவோம் என்று கூறினார்.