- வீடு›
- செய்திகள்›
- இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய 3 பேர் கைது
இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய 3 பேர் கைது
By: Karunakaran Sat, 19 Sept 2020 8:00:42 PM
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருநாடுகளுக்கும் மோதல் அதிகரித்து வருகிறது. லடாக் மோதலுக்கு பின், எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வேவு பார்ப்பது கடந்த சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான ரகசிய மற்றும் முக்கியமான தகவல்களை சீன உளவுத்துறைக்கு அனுப்பிய டெல்லியை சேர்ந்த ஃப்ரீலான்சிங் பத்திரிக்கையாளர் ராஜீவ் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், டெல்லியில் வசித்து வந்த சீனாவை சேர்ந்த பெண் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஆண் என மேலும் 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வெளிநாட்டினரிடமிருந்து ஃப்ரீலான்சிங் பத்திரிக்கையாளர் ராஜூவ் சர்மா மிகப்பெரிய அளவில் பணம் பெற்றுக்கொண்டு இந்திய பாதுகாப்புத்துறை தொடர்பான பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி முதலே ராஜூவ் சர்மா டெல்லி போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சர்மா சீன பெண் மற்றும் நேபாள ஆண் மூலமாக இந்திய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை சீன உளவு அமைப்புக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டார். அதன்படி, இன்று முறைப்படி கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.