கூடுதலாக 314 வகையான மருந்துகளை தயாரிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு
By: Nagaraj Mon, 27 Mar 2023 8:18:03 PM
திருமலை: திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் வழங்கும் வகையில், கூடுதலாக 314 வகையான மருந்துகளை தயாரிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருப்பதியை அடுத்த நரசிங்கபுரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் ஆயுர்வேத மருந்தகம் இயங்கி வருகிறது. அங்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
கூடுதல் மருந்துகள் தயாரிப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், ஆயுர்வேத மருந்தகத்தில் கூடுதல் கொட்டகை அமைத்து, இயந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இப்பணிகளை தேவஸ்தான இணை அலுவலர் சதாபர்கவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத மருந்தகத்தில் தற்போது 30 வகையான மருந்துகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு நவீன மருத்துவம் வழங்கும் வகையில், கூடுதலாக 314 வகையான மருந்துகளை தயாரிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதற்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 314 மருந்துகளும் விரைவில் தயாரிக்கப்படும். அதற்காக ரூ.5 கோடியில் கூடுதல் கொட்டகைகள் கட்டப்பட்டு அதில் மருந்தகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தில் மருந்துகள் தயாரிப்பதற்கு தேவையான அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த பணிகள் முடிந்ததும், வரும் 31ம் தேதி கொட்டகை திறக்கப்படும் என்றார்.